கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் பன்முக கலைஞர் என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

பல்வேறு திறன்கள் மூலம் அரசியல் மற்றும் எழுத்து உலகிலும் சிறந்து விளங்கினார் என்பதற்காக அவரின் திறமைகளை விளக்கும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி அவர்கள் பன்முக தன்மை கொண்டவர் என்பதை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அவரின் சிறப்புகளை 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தை உள்ளம் கொண்ட கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக்கலைஞர், திரைக்கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர், கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செந்தமிழ் கலைஞர், ஏற்றமுள தமிழில் இன்றுமுள கலைஞர் என மேற்கண்ட தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகளில் அவர் செய்த சாதனைகள் பாடத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் பணியாற்றிய திரைப்படங்களில் சமூக கருத்துகளை எடுத்துரைத்த திரைப்படங்கள் சிலவும் பாடப்புத்தகத்தில் இட.ம் பெற்றுள்ளது. மேலும், இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று அவரின் கையெழுத்தையும் பதித்துள்ளனர்.