2026 சட்டமன்ற தேர்தல் திருவிழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. அநேகமாக ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கும் என தெரிகிறது. அதற்காக இருபெரும் கூட்டணிகளான திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூ, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக, பாஜக, அன்புமணி பாமக, அமமுக மற்றும் சில கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி இடையே கடும்போட்டி நிலவுகிறது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘நலத்திட்ட நாயகன்’ என்ற பாணியில் மக்கள் நலத்திட்டங்களை வரிசை கட்டி செயல்படுத்தி வருகிறார். சமீபத்தில் கூட திண்டிவனத்தில் பல கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு புதிய பேருந்து நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். அதிமுகவும் இந்த முறை பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்படுத்தி முழு வேகத்தோடு தேர்தல் களத்தில் இறங்கி உள்ளது.

இதுஒரு புறம் இருக்க விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது தாழ்த்தப்பட்டோர் மட்டும் போட்டியிடும் தனித்தொகுதி ஆகும். இந்த தொகுதியை பொறுத்தவரை தற்போது அதிமுகவின் அர்ஜூனன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். வரும் தேர்தலிலும் இவர் போட்டியிடுவாரா? என்பது கேள்விக்குறிதான். அதே நேரத்தில் திமுகவில் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்த சீத்தாபதி சொக்கலிங்கம் மீண்டும் சீட் கேட்பாரா? என்பதும் சந்தேகம் தான். அதிமுக சார்பில் பலமான வேட்பாளரை நிறுத்தும்பட்சத்தில் திமுகவில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.
‘செல்வாக்கு’ மிக்க நபரை நிறுத்த திமுக தலைமை யோசித்து வந்த நிலையில்தான் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஹரிதாஸ், சமீபத்தில் திண்டிவனம் அரசு விழாவுக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். இது அரசியல் நோக்கர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் திமுக சார்பில் யாரை நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ ஹரிதாசுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்றே தெரிகிறது.
காரணம் ‘செல்வாக்கு’ மிக்க நபராக திகழும் இவர் அதிமுகவில் கண்டுகொள்ளப்படாத நிலையில்தான் இருந்து வந்தார். ஹரிதாஸ் கடந்த 2011 முதல் 2016 வரை திண்டிவனம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர். இவர் சமீப காலமாக அதிமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அதிருப்தியில் இருந்து வந்தார். தலைமையும் கண்டுகொள்ளவில்லை. இந்த நேரத்தில்தான் ஹரிதாஸ் திமுகவில் இணைந்துள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தோடு தான் இணைந்துள்ளார் என்று தான் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முதல்வரும் அவரை அன்போடு வரவேற்று வாழ்த்தி உள்ளார்.
இதன் மூலம் திமுகவிற்கு புது தெம்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ என்பதாலும் பிரபலமான டாக்டர் என்பதால் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளதால் இந்த முறை ஹரிதாசை வேட்பாளராக நிறுத்தலாம் என திமுக கருதுவதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. அதே நேரத்தில் நலத்திட்ட உதவிகள், தொழில் வளர்ச்சி, புதிய பேருந்து நிலையம் திறப்பு போன்றவற்றால் திமுகவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் திமுக முத்த நிர்வாகிகளும் இந்தப்போட்டியில் களம் இறங்க அதற்கான முயற்சிகள் நடந்தாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
தமிழக அரசு மாநிலம் முழுவதும் செய்துள்ள நலத்திட்டங்கள் குறிப்பாக திண்டிவனத்தில் சிப்காட், புதிய பேருந்து நிலையம், நகர மேம்பாடு என பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நேரத்தில் ஏற்கனவே மக்கள் மத்தியில் அறிமுகமான நபரான முன்னாள் எம்எல்ஏ ஹரிதாசை திமுக வேட்பாளராக களம் இறக்கினால் வெற்றியை உறுதியாக்கி விடலாம் என்று திமுக கணக்கு போடுகிறது. எதிர் தரப்பை பொறுத்தவரை அதிமுக தனது வேட்பாளரை நிறுத்துமா? அல்லது கூட்டணி கட்சியான அன்புமணி பாமகவுக்கு தள்ளி விடுமா? என்ற கருத்தும் உள்ளது. மொத்தத்தில் திண்டிவனம் சட்டமன்ற தேர்தல் களம் விரைவில் சூடுபிடிக்கப்போவது உறுதி.