தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 71 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போது பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் தலைமை.


தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அடுத்த மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

அந்த வகையில், திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. டெல்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, வரும் தேர்தலில் கூட்டணி யாருடன் என்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, உள்கட்சி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை, தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று அறிவித்து இருந்தார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கு நடுவே, தமிழக காங்கிரஸ் கட்சியில் 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செல்வப்பெருந்தகைகு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் மாற்ற்ப்பட்டு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக வழக்கறிஞர் செஞ்சி ரங்கபூபதி நியமனம்.