விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம், சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் கவின் கலை மன்றம் சார்பில் மகளிர் தின விழா மார்ச் 8ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் மா. வீரமுத்து தலைமையேற்றார். கவின் கலைமன்ற பொறுப்பாசிரியர் கீதா வரவேற்றார். சரசுவதி கல்விக்கோயிலின் முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார் அவர்கள் இவ்விழாவில் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக அலுவலர் சிவா, பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கடலூர் மாவட்டம், புள்ளியியல் துறை உதவி இயக்குநர் கனகேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமியில் முதலில் தொழில் செய்தவர்கள் பெண்கள்தான், பூமியில் மிகபெரிய ஆக்கசக்தியே பெண்கள்தான் என்று சிறப்புரையாற்றினார், திண்டிவனம், வழக்கறிஞர் மலர்விழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெண்களுக்கு அழகு அடையாளமல்ல அறிவுதான் அடையாளம் என்று சிறப்புரையாற்றினார்.
கோனேரிக்குப்பம், அரசு பள்ளி மாணவிகள், திருக்குறளில் இரட்டை உலக சாதனை படைத்த மாணவிகளான செல்வி.சாதனா, செல்வி.சத்யா ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களின் சாதனைகள் பற்றியும் திருகுறளின் சிறப்பு குறித்தும் சிறப்புரையாற்றினர். பெண்களின் பெருமை குறித்து மாணவர்கள் கவிதை வாசித்தனர்.
தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் தா விஜயலட்சுமி அவர்கள் மங்கையராய் பிறப்பதற்கே என்னும் தலைப்பில் கவிதை வாசித்தார். மகளிரின் மாண்பு குறித்து தமிழ் துறை மாணவி உரையாற்றினார். சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது இவ்விழாவின் நிறைவாக கவின் கலை மன்றம் உதவி பொறுப்பாசிரியர் பேராசிரியர் தா மஞ்சனி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அறக்கட்டளை ஊழியர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.