விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் அன்னம்பாக்கம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகள் இல்லாமல் 15 க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் குடும்பங்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகள் உடனடியாக வழங்கவும், வீட்டு மனை பட்டா, சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, அனைவருக்கும் அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்க்ரீட் வீடுகள் கட்டி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திண்டிவனம் வட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் திண்டிவனம் பகுதி செயலாளர் கண்ணதாசன், விழுப்புரம் மாவட்டக்குழு உறுப்பினர் இராமதாஸ், திண்டிவனம் பகுதிக்குழு உறுப்பினர் சத்தீஷ்குமார், கீழ் ஆதனூர் கிளை செயலாளர் வெங்கடேசன், DYFI நகரப் பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.